Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை குடிநீர் ஏரிகளில் மார்ச் வரை மட்டுமே தண்ணீர்

ஜனவரி 30, 2019 11:00

சென்னை: சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும். பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. 

தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது. 

இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும். 

இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர். 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர். 

 

தலைப்புச்செய்திகள்