Saturday, 1st June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, "காவலாளி என கூறிக்கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி எம்.பியும் பாஜகவைச் சேர்ந்தவருமான மீனாட்சி லெகி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூறியது.
இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இந்த வழக்கில் மீனாட்சி லெகி சார்பில் வாதாடிய வக்கீல், ராகுல்காந்தி வருத்தம் தெரிவிப்பது வெறும் கண்துடைப்புதான் என கூறினார். அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என சுப்ரீம் கோர்ட் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட் கண்டித்து உள்ளது. ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். எல்லோரும் தவறு செய்வார்கள் அதை ஒப்புகொள்ள வேண்டும் என கூறி உள்ளது.
சுப்ரீம் கோர்ட் கண்டித்த நிலையில் ராகுல் காந்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். அதில் பிரதமரை திருடன் என் கோரியதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் அரசியல் களத்தில் திருடன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என கூறினார். மன்னிப்பு கோரியதை பிரமாண பத்திரமாக மே 6-ந்தேதி தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்ரவு.