Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்ருட்டியில் தகராறை விலக்க சென்ற மூதாட்டி அடித்துக் கொலை

செப்டம்பர் 11, 2021 06:37

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கருக்கை பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 60). இவரது உறவினர் சாரங்கபாணி நேற்று இரவு மினி லாரியில் ராசாத்தியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள சந்திரலேகா என்பவரின் வீட்டிற்குள் ஒருவர் செல்கிறார் என சந்திரலேகாவின் உறவினர்களான சதீஷ்குமார் (20), தனவேல் (50) ஆகியோரிடம் சென்று சாரங்கபாணி கூறினார்.

உடனே அவர்கள் 2 பேரும் எங்களது உறவினர் வீட்டிற்கு யார் சென்றால் உனக்கு என்ன என்று கேட்டு சாரங்கபாணியை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர்‌. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து சாரங்கபாணியை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ராசாத்தி மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய 2 பேரும் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இதில் மேலும் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து ராசாத்தியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமயிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்