Wednesday, 29th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக, இன்று (மார்ச் 24) சிறப்பு விமானத்தில் துபாய் செல்கிறார்.
முதல்ராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக ஸ்டாலின், இன்று அரசு முறை பயணமாக, துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார். துபாயில் உலக கண்காட்சி, 2021 அக்., 1ல் துவங்கியது; இம்மாதம் 31ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்த கண்காட்சியில், தமிழக அரங்கில், நாளை முதல் 31ம் தேதி வரை, தமிழக வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரங்கை, முதல்வர் நாளை திறந்து வைக்க உள்ளார்.
அரங்கிற்கு வருவோர், தமிழகத்தின் அனைத்து சிறப்புகளையும், ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.
துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள்; வர்த்தக மற்றும் தொழிற் சங்கங்களின் தலைவர்கள்; புலம்பெயர் தமிழர்கள் உடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வருடன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜாகுல்கர்னி ஆகியோரும் செல்கின்றனர்.
இன்று சட்டசபை கூட்டத்தை முடித்து, மாலை 6:00 மணிக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர், சென்னையில் இருந்து, சிறப்பு விமானத்தில் துபாய் செல்கின்றனர். வரும் 27ம் தேதி முதல்வர் தலைமையிலான குழு சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.