Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி பிரச்சனைக்கு அப்பீல் செய்யாமல்...டாஸ்மாக் கடைக்கு மேல்முறையீடு செய்வதா?: தினகரன் கேள்வி

மே 10, 2020 02:54

சென்னை: “காவிரி பிரச்சனைக்கு அப்பீல் செய்யாமல், டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதா? அந்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும்,” என்று அ.ம.மு.க. பொதுச்செயலாலர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களின் உணர்வுகளை மதிக்காமல், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் இரண்டு நாட்களில் கொலை, தற்கொலை, குடும்ப வன்முறை,விபத்து என்று விரும்பத்தகாத சம்பவங்கள் மாநிலம் முழுக்க நடந்ததைப் பார்த்த பிறகும் மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்த எடப்பாடி பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.

தங்களுக்குப் போதிய உணவு, கவச உடை, தனிமைப்படுத்தும் போது தங்குமிடம் போன்ற வசதிகள் சரிவர இல்லாத நிலையிலும் தங்களின் உயிரைப்பணயம் வைத்து கொரோனா சிகிச்சைப்பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூன்று வேலை உணவு முழுமையாக கிடைக்காத போதும், கூலி வேலைக்கு போக வழியில்லாத நிலையிலும்கூட அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை 98 சதவிகித மக்கள் நேர்மையாக கடைபிடித்துவருகின்றனர். இதையெல்லாம் சீர்குலைக்கும் வகையில் அரசே மதுக்கடைகளை திறந்து கூட்டம் கூடச்செய்வது மக்களையும், உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினரையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

இதோடின்றி வருமானமில்லாத நிலையில், வீட்டில் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்பு பணத்தையும் பிடுங்கி, டாஸ்மாக் கடைக்கு எடுத்துச்சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இந்தச்சூழலில் தான் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை ஏற்று செயல்படவேண்டிய பழனிசாமி அரசு, தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

தமிழக மக்களின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் கலங்கி நிற்கும் நிலையில், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமி அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லவில்லை.

மது அரக்கனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்து 2016ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைத்தார்.
கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்று மதுக்கடைகளைத் திறப்பதில் பழனிசாமி அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது. இனிமேல் ‘இது அம்மாவின் அரசு' என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்