Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் சிரஞ்சீவி: கண்ணீர்விட்ட சரத்குமார்

மே 12, 2020 11:24

சென்னை: நடிகர் சரத்குமார் கண்ணீருடன் பிரபல நடிகர் குறித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தை எப்படி கழிக்கிறார்கள்? என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சரத்குமார் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நடைபெற்ற பல விஷயங்களுக்கு அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தெலுங்கு சேனல் ஒன்றிற்கு நடிகர் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பேட்டியளித்தனர். அதில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள நடிகர் சரத்குமார், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குறித்த கேள்விக்கு கண்ணீருடன் பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிப்பாளர் ஒருவர், “நடிகர் சிரஞ்சீவியின் கால்ஷீட்டை வாங்கிக் கொடுங்கள் படம் பண்ணலாம். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு பங்கு தருகிறேன்,” என்றார்
இதனால் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தப் போது, அவரிடம் தனிமையில் பேச வேண்டும் என்றேன். இதனை கேட்ட சிரஞ்சீவி தன்னுடைய ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அப்போது நீங்கள் நடித்துக் கொடுத்தால் என் பிரச்சனைகள் தீரும் என்றேன். அதனைக் கேட்ட அவர் இந்த படத்தை முடித்ததும் உங்களுக்கு தேதிகள் தருகிறேன் என்றார். பின்னர் உங்களின் சம்பளம் எவ்வளவு? என்று கேட்டேன். சிறிது நேர அமைதிக்கு பிறகு நீயே கஷ்டத்தில் இருக்கிறாய் எனக்கு சம்பளம் தரப்போகிறாயா? என கேட்டார்.

'கேங் லீடர்' படம் முடிந்த பிறகு அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர், ‘நீ ஹீரோவாகி விடுவாய்’ என்றார். அவர் கூறியது போன்றே நடந்தது. அவரைப் பற்றி பேச எனக்கு மேடைகள் கிடைப்பதில்லை என கண்ணீர் விட்டுள்ளார் சரத்குமார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்