![](admin/uploads/.5fae5b124e4259.50513225.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ஆதார் எண் உடன் ரேஷன் கார்ட்டை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்., மாத இறுதி வரை, ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி, உணவு பொருட்கள் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்., மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பொது விநியோக முறையில் (பி.டி.எஸ்.,) பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படமாட்டாது. ஆதார் எண் இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் பெயர் நீக்கப்படாது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் ரேஷன் பயனாளிகள் யாருக்கும் உணவு தானியங்களை வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும், ரேஷன் - ஆதார் இணைக்காவிட்டாலும், அவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்கவோ, ரத்து செய்யவோ கூடாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப காரணங்களாலும், உணவு தானியங்கள் வழங்க மறுக்கக்கூடாது.
என்.எப்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மானிய விலையில், நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வீதம் சுமார் 80 கோடி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை ஜூன் வரை, மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
23.5 கோடி ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களில், 90 சதவீதம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. 80 கோடி பயனாளிகளில் 85 சதவீதம் பேர், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். ஆதார் - ரேஷன் இணைப்பு முக்கியமானது. இதனால் பயனாளிகளின் உரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.