Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும்: முதல்வர் பேச்சு

மே 13, 2020 06:42

சென்னை: கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

 ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு உள்ளது.

கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவற்றை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் 0.67 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவுப்பொருள் பற்றாக்குறை இல்லை. மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் ரேஷன் பொருட்கள்  மக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

தலைப்புச்செய்திகள்