Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தனி தேர்வு மையம்

மே 17, 2020 07:23

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு தனி தேர்வு மையம் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 27 ல் நடத்தப்பட இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டிருந்தார். மேலும், பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பி வருவதற்கு, ‛ஆன்லைன்' வழியாக விண்ணபித்து, இ-பாஸ் பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இ-பாஸ் பெறுவது தொடர்பான முழு வழிகாட்டுதலை தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்துவிட்டு இ-பாஸ் பெற வேண்டிய முழு விபரத்தினையும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேரிடையாக எழுத்து மூலம் மே 21க்குள் அளித்திட வேண்டும். 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதிப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் இருப்பின் அவர்கள் விபரத்தினை உடன் எழுத்து மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மே 19க்குள் அளித்திட வேண்டும்.

அவர்களை பொதுத்தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு தனி சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வு மையமாகவும், துணை தேர்வு மையமாகவும் செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், மேஜை, நாற்காலிகள், உள்ளிட்டவற்றை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஒத்துழைப்புடன் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்