Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஷப்பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்: கேரளாவில் பரபரப்பு

மே 25, 2020 07:03

திருவனந்தபுரம்: கேரளாவில், கொல்லம் மாவட்டம், அஞ்சல் பகுதியை சேர்ந்தவர், உத்ரா, 23. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் கம்பெனி கிளார்க், சூரஜ், 26 என்பவரை திருமணம் செய்தார். 1 வயதில் மகன் உள்ளான். பிப்., இறுதியில் பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கியபோது, உத்ராவை பாம்பு கடித்தது. சிகிச்சைக்கு பின் அஞ்சலில் உள்ள தாய் வீட்டில், உத்ரா ஓய்வெடுத்தார்.

மே, 6ல் வீட்டு மாடி, 'ஏசி' அறையில், பாம்பு கடித்து உத்ரா பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர், அஞ்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், உத்ராவை, அவர் கணவர் சூரஜ் கொலை செய்தது உறுதியானது. அவர் கைது செய்யப்பட்டார்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:சூரஜின் அலைபேசியை சோதித்தோம். உத்ராவை இரண்டாவதாக பாம்பு கடித்த, மே, 6ம் தேதிக்கு முந்தைய நாள் வரை, ஆறு மாதங்களாக, அடூரை சார்ந்த பாம்பாட்டி, சுரேஷிடம் போனில் பேசியது தெரியவந்தது.

சுரேஷிடம் விசாரித்தோம். மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில், கருமூர்க்கன் விஷப்பாம்பை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, சூரஜ் வாங்கியது தெரியவந்தது. இந்த பாம்பை வைத்து, இரண்டு முறை உத்ராவை கடிக்க வைத்து ரசித்துள்ளார்.

இரண்டாவதாக உத்ராவை பாம்பு கடித்த போது, பாம்பை பெட்டிக்குள் அடைக்க முடியாததால், அதிகாலையில் வீட்டை விட்டு சூரஜ் வெளியேறினார். பாம்பாட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சூரஜின் உறவினர்கள் இருவரிடம் விசாரிக்கப்படுகிறது. உத்ரா கொலைக்கு, வரதட்சணை பிரச்னை மட்டும் காரணமா, வேறு காரணம் உள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.

தலைப்புச்செய்திகள்