Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும். தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும். எங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல.
பயணிகள் 'கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்' பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் இயற்கையாகவே இங்குள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை மஹா.,வில் 72 பேர், தமிழகத்தில் 71 பேர், கர்நாடகாவில் 35 பேர் என அங்கிருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சுமார் 3.80 லட்சம் பேர் கேரளாவுக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2.16 லட்சம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை 1,01,779 பேர் ஏற்கனவே கேரளா வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வர 1.34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 11,189 பேர் மே 25 வரை கேரளா வந்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.