Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறைக்குள் கொரோனா; மனிதநேயத்தோடு 7 தமிழரை விட வேண்டும்: சீமான்

மே 28, 2020 07:45

சென்னை: “சிறைகளுக்குள் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மனிதநேயத்துடன் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளது உடல்நலனும், மனநலனும் மிகவும் குன்றியிருக்கும் சூழலில் சிறைக்குள் நோய்த்தொற்று பரவினால் அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாய் முடியும் பேராபத்து இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் 30வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் எழுவரும் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் துன்பத்திற்கு ஆட்பட்டு, அவர்களது நோய் எதிர்ப்புத்திறன் மலிந்துள்ள நிலையில், எழுவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றின் தாக்கம் வீரியம் பெற்று சிறைக்குள்ளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அவர்கள் எழுவரையும் விடுப்பில் விடவேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது.

ஏழு பேரின் விடுதலை என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகிவிட்டதால், விடுப்பு என்பது எளிதாக நிகழ்த்தக்கூடியதென்றால், மிகையாகாது. எழுவரும் உயரடுக்குப் பாதுகாப்புப் பகுதியிலிருப்பினும் அங்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் மனிதநேயத்தோடு எழுவருக்கும் நீண்ட விடுப்பு தந்து அவர்களது உயிர்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்