Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி, மாறி சினிமா வசனம் பேசுகின்றனர்; முதல்வர், அமைச்சர் மீது தினகரன் விமர்சனம்

மே 29, 2020 07:19

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக் கொண்டே செல்கிறது. இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி சினிமா வசனங்களைப் போல பேசுவது மட்டுமே போதுமென்று முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது. திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போகிறார்களோ என்ற கவலையையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. கவச உடை அணிந்த ஊழியர்கள்தான் அவரது உடலை வெளியில் கொண்டு வந்திருக்கின்றனர். அதன்பிறகு என்ன நடந்ததோ, அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தது.

பிரிசில்லாவின் ‘கேஸ் ஷீட்’டில் (CASE SHEET) கோவிட்- 19 வைரசால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிக்கப்பட்டிருந்ததை அவரது சகோதரர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கு, ‘‘கேஸ் ஷீட்டில்” யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்’ என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை தரப்பு அளித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய துயரம்? தலைமை செவிலியருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நோயாளிகளின் கதி என்ன? இந்த லட்சணத்தில்தான் சுகாதாரத்துறை நிர்வாகம் செயல்படுகிறதா? ெகாரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது உண்மை எனில், பணிக்காலம் முடிந்த பிறகும் கொரோனா எதிர்ப்புக்களத்தில் பணிபுரிந்த அந்தச் செவிலியருக்கு பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா? தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?

இதைப் பார்த்தபிறகு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது பற்றி மக்களிடம் புதிய சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே செல்கிறது.

இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி சினிமா வசனங்களைப் போல பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால், பெரும்தொற்று நோயைத் தடுப்பதற்கு உண்மையான அக்கறையோ, ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களோ இல்லாத இவர்களின் செயல்பாடுகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதையாவது உணர்வார்களா?”. இவ்வாறு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்