Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்த ஆண்டு ஐ.பி.எல். கண்டிப்பாக நடக்கும்: கும்ப்ளே நம்பிக்கை

மே 31, 2020 08:16

மும்பை: ஐ.பி.எல். போட்டிகள் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டனும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் காலி மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் 3 அல்லது 4 மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளையும் நடத்தவும் அவர் பி.சி.சி.ஐ.க்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள தற்போதைய சூழலில் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகளை நடத்தும் பி.சி.சி.ஐ.யின் முடிவுக்கும் அனில் கும்ப்ளே வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த ஐ.பி.எல். போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகவும் உள்ள அனில் கும்ப்ளே, ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் சூழலில் 3 அல்லது 4 இடங்களில் போட்டிகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வீரர்கள் ஒரே இடத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கும்ப்ளேவின் கருத்தையே முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான வி.வி.எஸ்.லஷ்மணனும் வலியுறுத்தியுள்ளார். 3 அல்லது 4 மைதானங்கள் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கேயே ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தையும் நடத்த அவர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் விமானம் உள்ளிட்டவற்றின் மூலம் வீரர்கள் மற்ற இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்