Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நொய்டா தொகுதியில் ராஜ்நாத்சிங் போட்டி

மார்ச் 15, 2019 06:04

புதுடெல்லி: பாரளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனால் உத்தரபிரதேசத்தில் கடும் சவாலான நிலையை பா.ஜனதா சந்தித்துள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. சாதனை படைத்தது. ஆனால் இந்த தடவை அகிலேஷ்- மாயாவதியின் கூட்டணி காரணமாக பா.ஜ.க.வின் வெற்றி பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது. 

கருத்து கணிப்புகளிலும் பா.ஜனதாவுக்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 20 முதல் 30 தொகுதிகளே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து முக்கிய தலைவர்களை வேறு தொகுதிகளில் போட்டியிட வைக்க பா.ஜ.க.வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் கடந்த தேர்தலில் லக்னோ தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தடவை அவரை நொய்டா தொகுதியில் போட்டியிட வைக்க ஏறுபாடுகள் நடந்து வருகிறது. 

அதுபோல மதுரா தொகுதியில் இருந்து எம்.பி.யான நடிகை ஹேமமாலினியை இந்த தடவை பதேபூர்சிக்ரி தொகுதிக்கு மாறும்படி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். அந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்த சவுதரி பாபுலால் மீது கடும் அதிருப்தி நிலவுவதால் அந்த தொகுதிக்கு ஹேமமாலினியை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

உன்னவ் தொகுதியில் இருந்து சாக்சிமகாராஜ் என்ற சாமியார் எம்.பி.யாக தேர்வாகி இருந்தார். அவர் பேசிய பல கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கின. இதனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். 

இதையடுத்து அந்த தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான உமாபாரதியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 40 எம்.பி.க் களை தொகுதி மாற்றம் செய்ய பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்