Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிர கூட்டணி அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா ஆருடம்

ஜுன் 02, 2020 06:05

புதுடெல்லி: காங்., தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணியுடன் மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா அரசை, கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியமைக்கிறது. கொள்கை ரீதியாக இந்த கட்சிகளிடையே வேறுபாடு உள்ளதால், மாநில அரசின் முடிவுகளில் கூட்டணி கட்சிகளிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவியது. சமீபத்தில் மஹா.,வில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பும், அரசின் நடவடிக்கைகளிலும் தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக முதல்வர் உத்தவ் தாக்கரே கவர்னரை சந்தித்தார். ஆனால், கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கொரோனா பரவலால் பொருளாதார பாதிப்பு அடையாத நாடு எதுவும் இல்லை. உலக அளவில், இந்தியாவின் நிலை கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்னர் முன்னேற்றமாக இருக்கும் என உறுதியாக கூறுகிறேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் முதல் இலக்கு.

மஹாராஷ்டிரா அரசை கலைக்க திரைமறைவு வேலைகளில் பாஜ., ஈடுபடாது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியிலேயே முழு நோக்கமும் இருக்கிறது. மஹா.,வில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளன. அவர்களுக்குள் ஒத்த கருத்து இருந்தால் ஆட்சிக்கு என்ன ஆபத்து இருக்கப் போகிறது? ஏதாவது ஒரு கட்சி, கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து பிரிந்தால், மஹா., அரசை யாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்