Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு பணியில் உயிர்நீத்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

ஜுன் 02, 2020 10:10

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் உயிர்நீத்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு பணியாற்றி வந்த செவிலியர் ஜான் மேரி பிரிசில்லா நோய்தடுப்பு பணிகளில் முன்னணி வீரராக பணியாற்றி உயிர் நீத்துள்ளார். அதனைப் போன்றே சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவுபடி கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷாவும் உயிரிழந்துள்ளார்.

இது போன்ற தருணத்தில் மக்களுக்காக பணியாற்றி உயிர் தியாகம் செய்தவர்களை நாடே போற்றுகிறது. இவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக அரசு கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் செவிலியர் ஜான் மேரி பிரிசில்லாவிற்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அது போல் மருத்துவர் அப்ரோஸ் பாஷா குடும்பத்திற்கு இதுவரை எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை என்பது கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

இதனை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து மருத்துவர் அப்ரோஸ் பாஷா குடும்பத்தினருக்கு, ரூபாய் 50 லட்சம் நிவாரண தொகை கிடைத்திட உதவிட வேண்டும். இது போன்ற தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்வது, பணியிலிருக்கும் இது போன்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்