Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாக்களிடம் இருந்து தி.மு.க.வை காப்போம்: சீண்டிப்பார்க்கும் அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்

ஜுன் 02, 2020 10:24

சென்னை: கொரோனாக்களிடம் இருந்து தி.மு.க.வை காப்போம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள்  கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 3-ம் தேதியன்று நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப்
பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், அபலைகள், வீடற்றவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் என, நம்மால் முடிந்த அளவிலான பணிகளை கருணாநிதி பிறந்த நாளில் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கருணாநிதி காலத்திலேயே தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவரது மூத்த மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இந்தாண்டும் தடலாடி போஸ்டர்களை ஒட்டி இருக்கின்றனர். கருணாநிதி மறைந்த உடனேயே தி.மு.க.வில் மீண்டும் இடம்பிடிக்க மு.க.அழகிரி முயன்றார். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. இதனால் தனி அமைப்பு அல்லது கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மாவட்டங்கள் தோறும் சென்று கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால், தி.மு.க. தலைமையின் சமாதானப் பேச்சுகளால் அழகிரி அமைதி காத்தார். இதன்பின்னரும் அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை. இதனால் அழகிரி, ரஜினிகாந்த் தலைமையிலான கட்சியில் இணைவார், பா.ஜ.க.வில் ஆதரவாளர்களுடன் இணைவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அழகிரியோ, தி.மு.க.வை விமர்சிப்பதை மட்டும் பதிலாக வைத்து வருகிறார்.

தற்போது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தி.மு.க. தலைமையை சீண்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், உடன்பிறப்புகளின் உதிரம் குடிக்கும் 'கொரோனா'க்களிடம் இருந்து கழகத்தை காத்திட உன் பிறந்த நாளில் உறுதியேற்கிறோம் என பதிவு செய்துள்ளனர்.

இது தி.மு.க.வினரை சீண்டும் வகையில் இருப்பதால் கட்சி மேலிடத்துக்கு இந்த போஸ்டர்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மதுரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்