Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.
முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் அச்சத்துடனே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அனுப்பியுள்ள மனு: தலைமை செயலக பணியாளர்கள், 50 சதவீதம் பேர், தினமும் பணிக்கு வருகின்றனர். கடந்த வாரங்களில், தலைமை செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.அவர்களுடன் பழகிய மற்ற பணியாளர்கள், நோய் தொற்றை, தங்கள் குடும்பத்தினருக்கும், உடன் பணி செய்வோர் மற்றும் பயணம் செய்யும் பிறருக்கும், பரப்பும் அபாயம் உள்ளது.
நோய் தொற்று சமூக பரவலாக பரவாமலிருக்க, ஊரடங்கு முடியும் வரை, 50 சதவீத பணியாளர்களுக்கு பதிலாக, 33 சதவீத பணியாளர்களை மட்டும், பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.மேலும், அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, கொரோனா நோய் தொற்றுள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.