Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில், 20,575 பேர் ஆண்கள். 12, 637 பேர் பெண்கள் மற்றும் 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கொரோனா உறுதியான 1,562 பேரில் 941 பேர் ஆண்கள். 621 பேர் பெண்கள். 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 6,07,952 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், 14,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை, 5,80,768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நேற்று மட்டும் 14,454 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 77 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதில் 44 அரசு ஆய்வகங்கள். மற்ற 33 தனியார் ஆய்வகங்கள் ஆகும். 12 வயது வரை உள்ள சிறுவர்களில் 1,756 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 27,906 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,558 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று மட்டும் அரசு மருத்துவமனையில் 14 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். (சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.) இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.