Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் இறைச்சிக்குள் நாட்டு வெடியை வைத்து, நரியை கொன்ற 12 பேர் கைது

ஜுன் 09, 2020 09:52

திருச்சி: ஜீயபுரம் அருகே வெடிமருந்து கலந்த இறைச்சி மூலம் நரியைக் கொன்ற 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள வனப்பகுதியில் மான், நரி, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இந்த காவிரி ஆற்றங்கரைக்கு அருகில் வயல் பகுதிகள் உள்ளன. இங்கு வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

உணவுத் தேடி வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் சமயங்களில் வயல்வெளிப் பகுதிக்குள் வருவதுண்டு.இவற்றை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வரும். வன உயிரின வேட்டையை தடுக்கவும் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் வனத்துறையினரும் காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு கும்பலை காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் சாக்குப் பை ஒன்று இருந்ததை காவல் துறையினர் கண்டனர். உடனடியாக அதை பறிமுதல் செய்து பிரித்துப் பார்தபோது அதில் வாய் கிழிந்த நிலையில் நரி ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது. உடனடியாக 12 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியைச் சேர்ந்த ராம்ராஜ் (21), சரவணன் (25), ஏசுதாஸ் (34), சரத்குமார் (28), தேவதாஸ் (41), பாண்டியன் (31), விஜயகுமார் (38), சத்தியமூர்த்தி (36), சரத்குமார் (26), ராஜமாணிக்கம் (70), ராஜூ (45), பட்டம்பிள்ளை(78) ஆகியோர்
என்பது தெரியவந்தது. பின்னர் 12 பேரும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த கும்பல் தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாடி வந்தது விசாரணையில் தெரியவந்தது . துப்பாக்கி ஈட்டி வலை விரித்தும் வேட்டையாடி வந்துள்ளனர். அதோடு இறைச்சிக்குள் நாட்டு வெடியை மறைத்து வைத்து அதைக் கடிக்கும்போது வெடித்த பின்னர் வன உயிரினங்கள் வலியால் நிலை தடுமாறும்போது அவற்றைப் பிடித்துள்ளனர்.

இந்த வேட்டை முறையைப் பயன்படுத்திதான் நரிக்கு வெடி மருந்து கலந்த இறைச்சியைச் சாப்பிட வைத்து பிடித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.சமீபத்தில் கேரளாவில் யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து கலந்து கொடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தலைப்புச்செய்திகள்