![](admin/uploads/.5d400638dba9f2.55873407.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்கபடுத்த என்ன விதிமுறைகளை கொண்டு வர உள்ளீர்கள்? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா
என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற, கிராமப்புற மற்றும் ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத்கோத்தாரி,சுரேஷ்குமார் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? ஏதாவது திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதாக கூறினார். இதையடுத்து, கொரோனா காரணமாக அனைத்துமே ஆன் லைன் முறையில் உள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆன் லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 20 ம்தேதி ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.