Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், 30 பேர் குணமடைந்தனர்

ஜுன் 13, 2020 06:31

சென்னை; சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், 30 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.சென்னையில், கொரோனா பாதித்தவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளிக்கும், கூட்டு மருத்துவ சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது.

இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், கொரோனா நோயாளிகளுக்காக, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை, சென்னை மாநகராட்சி அமைத்தது.இங்கு, 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 30 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.பின்னர், அவர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சித்த மருத்துவ சிகிச்சையால், குறுகிய காலத்தில் குணமடைந்துள்ளனர். சென்னையில் உள்ள, 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களில், 5,210 தெருக்களில் மட்டுமே, கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. தேனாம்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கத்தில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில், மக்கள் ஒத்துழைப்பு, இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.

கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல, கூடுதலாக, 50 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும், தனி தொலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில், படுக்கைகள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், 14 நாட்கள் தனிமை என்பது, நல்ல எண்ணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்து விட்டு, பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

அதனால், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பலர் பாதிக்கப்படுவர். அதை தடுக்கவே, 14 நாட்கள் தனிமை என, அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டு விடுவோம்இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், அதிகளவில் பரிசோதனை நடத்தப்படுகிறது. நம்மிடம் தேவையான, பி.சி.ஆர்., பரிசோதனை கருவிகள் உள்ளன. பொது மக்கள் நம்பிக்கையுடன் இருந்து, ஒத்துழைப்பு அளித்தால், இந்த கொள்ளை நோயில் இருந்து, விரைவில் மீண்டு விடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது:இங்கு சிகிச்சை பெற்று வந்த, 120 நோயாளிகளில், 30 பேருக்கு அறிகுறிகள் நீங்கியுள்ளன. இதையடுத்து, அவர்களுக்கு, மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஏழு நாட்கள் சிகிச்சை மேற்கொண்ட, 6 பேருக்கு தொற்று நீங்கி, குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில், நான்கைந்து நாட்கள் சிகிச்சை பெற்றவர்களுக்கு தொற்று உள்ளது. ஆனால், அவர்களுக்கு அறிகுறிகள் நீங்கி உள்ளதால், வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்