Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகார தோரணையில் வலம்வரும் செந்தில்பாலாஜி: கரூர் மாவட்ட தி.மு.க.வினர் குமுறல்!

ஜுன் 14, 2020 07:33

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கை பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செந்தில்பாலாஜி அமைச்சர் மற்றும் அதிகார தோரணையிலேயே வலம்வருவதாகவும், அவரை கட்சிக்காரர்கள் உள்ளிட்ட யாரும் அவ்வளவு எளிதாக அணுக முடியவில்லை என கரூர் தி.மு.க.வினரிடையே புகார் எழுந்துள்ளது. கரூர் தி.மு.க.வை பொறுத்தவரை வாசுகி முருகேசன் மறைவுக்கு
பிறகு பல கோஷ்டிகள் உருவெடுத்துவிட்டன. கே.சி.பி., கரூர் சின்னச்சாமி, வாசுகி முருகேசன் தம்பி ரவிக்குமார், நன்னியூர் ராஜேந்திரன் என ஏற்கனவே உள்ள கோஷ்டி அரசியல் வரிசையில் புதிய வரவு செந்தில்பாலாஜி கோஷ்டி. 

அ.தி.மு.க.வில் இருந்து அ.ம.மு.க.வுக்கு சென்று அங்கிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர் செந்தில்பாலாஜி. இவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது முதலே கரூர் தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கரூர் தி.மு.க.வில் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 

தி.மு.க. தலைமையின் நெருங்கிய வட்டத்தில் தாம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அழைத்துவந்து கரூரில் நிகழ்ச்சிகளை நடத்தினார். செந்தில்பாலாஜி எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி தலைமையின் நெருங்கி வட்டத்திற்குள் தானும் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை கரூரில் உருவாக்கிவிடுவார்.

செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இணைய முடிவெடுத்துவிட்டார். இது எப்படியோ தலைமைக்கு தெரிந்து செந்தில்பாலாஜியை அனுப்பி சமாதானம் செய்தார்கள். செந்தில்பாலாஜிக்கு அவர் மீதுள்ள வழக்குகளை சமாளிக்கவே நேரம் சரியாக உள்ளது. இதில் எப்படி அவர் கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்.

செந்தில்பாலாஜியை கட்சிக்காரர்கள் ஒரு அவசரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் கூட முடியாது. ஒன்று அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும், இல்லையென்றால் அழைப்பு ஏற்கப்படவில்லை என பதில் வரும். இது குறித்த புகார் தலைமைக்கு சென்றதால் இப்போது தான் தனக்கு வரும் அழைப்புகளை அவர் ஏற்கிறார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இவருக்கும் இருக்கும் அதிகாரச்சண்டையில் கட்சியை பலிகடாவாக்கி வருகிறார்.

செந்தில்பாலாஜியை சுற்றி அ.ம.மு.க.வில் இருந்து தன்னுடன் தி.மு.க.வில் இணைந்தவர்களே இருப்பார்கள். அவர்களை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்வார், காரில் ஏற்றிக்கொண்டு சுற்றுவார். பரம்பரை, பரம்பரையாக தி.மு.க.வில் இருப்பவர்களை கண்டுகொள்வதில்லை. செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் பிடிக்காமல் கரூர் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியை சேர்ந்தவரும், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் முக்கிய பொறுப்பில் உள்ளவருமான மாரப்பன் அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டார். இன்னும் பலர் இணையலாமா? என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்த பஞ்சாயத்து இங்கு எடுபடவில்லை. மேலும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், செந்தில்பாலாஜிக்கும் இருக்கும் அதிகார சண்டையில் அப்பாவி தி.மு.க.வினர் பலிகடா ஆக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்