Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே தனது தம்பியின் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது மொபட் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. இவருடைய மனைவி சாந்தி( 31). இவர் தனது தம்பியின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கவும் நகைகள் வாங்குவதற்காகவும் சிறுகளத்தூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு மொபட்டில் சென்றார்.
அவருடன் பவுனம்மாள் என்பவர் சென்றார். இலையூர் புறவழிச்சாலை அருகே சென்றபோது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் அடிபட்டு சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பவுனம்மாள் காயமடைந்தார்.
இதையடுத்து பவுனம்மாள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த இளையராஜாவை(30) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.