Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுலுக்கு பதில் சொல்ல முடியாமல் கல்லூரிக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்: குஷ்பு

மார்ச் 16, 2019 05:13

சென்னை:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

ராகுலின் இந்த பயணத் திட்டம் மிகவும் ரகசியமாக இருந்தது. ஒருநாள் முன்பு தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே தெரியவந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சில நாட்களாவே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கல்லூரி கல்வித்துறை அந்த துறையின் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது. 
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவிகளிடம் கலந்துரையாடியதில் எந்த தவறும் இல்லை. 3 ஆயிரம் மாணவிகள் மத்தியில் ராகுல் சளைக்காமல் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறினார். இந்த தைரியம் மோடிக்கு வருமா? 

ராகுல் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட கோபம், மக்கள் மத்தியில் ராகுலுக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட வெறுப்பு, பயம் காரணமாக கல்லூரியை மிரட்டுகிறார்கள். 

பா.ஜனதா போல் நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டுவது கிடையாது. மக்கள் ராகுல் பக்கம் திரளுகிறார்கள். அதனால் ஏற்பட்ட பொறாமையால் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகிறார்கள். 

நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை முடிவு செய்துள்ளனர். யார்-யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து இரண்டொரு நாளில் அறிவிக்கும். 

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு பிரசாரம் பற்றி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்