Saturday, 29th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டார்குப்பத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(65). கூலி தொழிலாளி. இவரது மகன் கலியமூர்த்தி(35). இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்த நிலையில் தனக்கு இன்னும் திருமணம் நடத்தி வைக்கவில்லை என்று கலியமூர்த்தி தனது தந்தையிடம் கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்து கலியமூர்த்தி தப்பி சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற காரணத்திற்காக மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.