![](admin/uploads/.607d1e032f9e15.46018036.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சை: கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கோபாலன்(வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அங்கு உள்ள உத்திராதி மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஆவார்.
தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர்இ கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன் மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை படுகொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பா.ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.