Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரதமர் மோடி கடும் கண்டனம்

மார்ச் 16, 2019 06:07

புதுடெல்லி: நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.  நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் புகுந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 49 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இதன் இடையே, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மற்றொரு மசூதியிலும், மருத்துவமனை வாசலிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், மற்றொரு இடத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும் அந்நாட்டு மீடியாக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன், அதனை சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளான்.  துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம். துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும்  அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில்  நியூசிலாந்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் குறித்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறையை ஆதரிப்பவர்கள், அனைத்து விதத்திலும் தீவிரவாதத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேபோல் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோரும் நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனமும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்