Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை மாவட்டத்தில்  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு: கலெக்டர் கோவிந்தராவ் 

ஜுலை 02, 2020 07:27

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது்-
கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழிபாட்டு தலங்களை அரசு வழிகாட்டுதல்களுடன் திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்ட அளவிலான 3 சமுதாய தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

மேலும் கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரும் வட்ட அளவில் தாசில்தார் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவினர் மூன்று மதங்களை சார்ந்த தலைவர்களுடன் கூட்டம் நடத்துவர்.
இதில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள எந்தெந்த வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என வட்ட அளவிலான குழுக்களின் பரிந்துரையை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் பரிசீலித்து முடிவு செய்வர். இதன்படி கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் திறக்கப்படும்.

தஞ்சை மாநகராட்சி கும்பகோணம் பட்டுக்கோட்டை நகராட்சி 22 பேரூராட்சிகளின் எல்லைகளில் உள்ள கோவில்களை திறக்க அனுமதியில்லை. தஞ்சை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மாவட்டத்தில் இதுவரை 44754 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை வசதி மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இருந்தால் அப்பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 22 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

சென்னை மற்றும் இதர பகுதிகளிலிருந்து வந்த 9289 பேரில் 345 பேர் தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 241 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வல்லம் கொரோனா சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர 8673 பேர் அவரவர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்