Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்திய எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்கிறார்.
லடாக்கின் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்தது. இதனைத் தடுத்த போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
சர்வதேச விதிகளை மீறி எல்லையில் சீனா தமது படைகளைக் குவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ராணுவ தளபதி நரவனே 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். அங்கு எல்லை நிலவரங்களை அவர் ஆய்வு செய்தார். மேலும் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களையும் லே மருத்துவமனையில் நரவனே சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்கிறார். அவருடன் ராணுவ தளபதி நரவனேவும் லடாக் செல்கிறார். சீனாவுடன் எல்லை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ராஜ்நாத்சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.