Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் ஓட ஓடவிரட்டி குத்திக்கொலை

ஜுலை 10, 2020 10:05

சென்னை : 4 மாத வீட்டு வாடகையை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓடவிரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன்(50). வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருக்கு மாலதி(40) என்ற மனைவியும் வசந்தகுமார்(21) கேசவன்(20) என 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக 2 வீடுகள் கட்டி அதில் ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டு இருந்தார்.

தற்போது மகன்களின் படிப்பு சம்பந்தமாக மனைவி மற்றும் மகன்கள் அயனாவரத்தில் உள்ளனர். குணசேகரன் மட்டும் இந்த வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

வாடகைக்கு விட்டுள்ள வீட்டில் அஜித்(21) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாததால் கடந்த 4 மாதங்களாக அஜித் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றும் இதனால் சில தினங்களுக்கு முன்பு அவர்களது வீட்டின் மின் இணைப்பை குணசேகரன் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் பெற்றோரிடம் குணசேகரன் 4 மாத வீட்டு வாடகையை தரும்படி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அஜித்திடம் இதுபற்றி அவரது பெற்றோர் தெரிவித்தனர். உடனே அஜித் குணசேகரனிடம் இதுபற்றி தட்டிக்கேட்டபோது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குணசேகரன் அஜித்தை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசேகரனை குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் உயிருக்கு பயந்து கத்திக்குத்து காயத்துடன் அங்கிருந்து தெருவில் தப்பி ஓடினார். ஆனால் அஜித் விடாமல் விரட்டிச்சென்று ஓட ஓட விரட்டி குணசேகரனை சரமாரியாக கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாலையில் தர தரவென இழுத்து வந்து அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போரூர் உதவி கமிஷனர் சம்பத் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் ஆகியோர் வந்து கொலையான குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்தனர்.

ஊரடங்கு காலத்தில் வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக அரசும் ஐகோர்ட்டும் தெரிவித்து இருந்த நிலையில் 4 மாத வீட்டு வாடகையை கேட்டதால் வீட்டின் உரிமையாளரை குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்