Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்னை நடிக்க விடாமல் வடிவேலு டார்ச்சர் செய்தார்: காமெடி நடிகர் பெஞ்சமின் பரபரப்பு புகார்

ஜுலை 11, 2020 02:57

சென்னை: நடிகர் வடிவேலுவால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடந்த சம்பவத்தை பற்றி  காமெடி நடிகர் பெஞ்சமின்.விரிவாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகளை இன்றும் பலர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் பெஞ்சமின் வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடித்தபோது வடிவேலுவால் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஏகப்பட்ட நகைச்சுவை திரைப்படங்கள் வந்து இன்றும் மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் 1990களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. செந்தில் மற்றும் கவுண்டமணி நடிக்கும் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது, அவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்து வந்த நிலையில், செந்தில், கவுண்டமணிக்கு பிறகு வடிவேலு அந்த இடத்தை நிரப்பி வந்தார்.

வசன உச்சரிப்பிலும் உடல் மொழியாலும் தனித்துவமான நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்ததில் வல்லவராக இருந்து வருகிறார் நடிகர் வடிவேலு. நடிகர் ராஜ்கிரணால் சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு பின்னாளில் அசைக்கமுடியாத ஒரு மிகப் பெரிய நகைச்சுவை நட்சத்திரமாக வந்து நின்றார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலைமை வந்த நிலையில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வடிவேலுகாகவே பல படங்கள் பல நாட்கள் ஓடியதும் இங்கு உண்டு.

அந்தவகையில் வடிவேலுவின் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று இயக்குனர் சேரன் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு. பார்த்திபன், மீனா, முரளி, மாளவிகா என பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தாலும் இந்த படம் நகைச்சுவைக்காகவே பல நாட்கள் ஓடியது. இதில் வடிவேலு துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்து பகட்டு காட்டி கொள்ளும் கதாபாத்திரத்தில் மிக தத்ரூபமாக நடித்து இந்த படத்திற்கு மேலும் சிறப்பை கூட்டி இருந்தார்.

இந்நிலையில் வடிவேலுவுடன் வெற்றிக்கொடிகட்டு படத்தில் ஒரு காமெடி காட்சியில் இணைந்து நடித்திருந்தார் காமெடி நடிகர் பெஞ்சமின். சமீபத்தில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி புட்டு புட்டு வைத்தார்.

கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த பெஞ்சமினை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார். சேரன் சொன்னபடி வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்ற பெஞ்சமின் கிட்டத்தட்ட 18 நாட்கள் ஒரு புளிய மரத்தடியில் நாற்காலியைப் போட்டு உட்கார வைத்து விட்டாராம், காரணம் கேட்டதற்கு வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும். அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வடிவேலு நாளைக்கு வந்து விடுவார். என கிட்டத்தட்ட 18 நாட்கள் பெஞ்சமினை ஒரு புளிய மரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன்.

ஒருவழியாக வடிவேலு படப்பிடிப்புக்கு வந்தவுடன் இவர்களுக்கு இடையேயான காட்சி எடுக்கப்பட்ட போது பெஞ்சமினை நடிக்க விடாமல் வடிவேலு தனது முக பாவனையால் கிண்டல் செய்ததாகவும், அதனால் பெஞ்சமின், வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சி கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாக்கப்பட்டதாகவும் அதன் மதிப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் எனவும், கடைசியில் நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பின் அந்த வடிவேலுவை திட்டுவது போல இருந்த காட்சி படமாக்கப்பட்டது என மிகவும் வருந்தி அந்த பேட்டியில் பெஞ்சமின் கூறியிருந்தார்.

இவ்வாறு தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பாராமல் என்னை நீ திட்டி விடுவாயா?? திட்டி விட்டு உயிரோடு ஊருக்கு போய்டுவியா? என்ற தோணியில் மிரட்டி என்னை பயமுறுத்தி அந்த ஒரு காட்சிக்காக பல டேக்குகள் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வீணடித்து விட்டார்.

அனைவரும் ரசித்து பார்த்த அந்த நகைச்சுவை காட்சிக்கு பின் இவ்வளவு பெரிய சம்பவம் உள்ளதா? என இந்த பேட்டியை பார்த்தபின் அனைவரும் ஆச்சரியப்பட்டும், பெஞ்சமினுக்காக பரிதாபப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் வடிவேலுவை பற்றி பல புகார்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெஞ்சமினின் புகாரும் தற்போது வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்