Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ட்ரிபிள் லாக்டவுன்: கர்நாடக கையில் எடுக்கும் ஆயுதம்: பெங்களூரு பெருநகரம் தனித் தீவாகும் வாய்ப்பு

ஜுலை 11, 2020 05:57

பெங்களூரு: கேரள அரசை போல டிரிபிள் லாக் டவுன் நடைமுறையை கையில் எடுப்பதற்கு கர்நாடக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  எனவே,  பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பிற மாநிலங்களிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் வரை பெங்களூரு நகரில் தினமும் நூற்றுக்கும் குறைவான கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரத்தை தாண்டி கொண்டிருக்கிறது. தினம் தினம் புதிய உச்சம் என்ற அளவுக்கு உயர்வதால் கர்நாடக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெங்களூரு நகரத்திற்கு 7 அமைச்சர்கள் கொண்ட குழுவை பிரத்தியேகமாக நியமித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. இதனிடையே, 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் சிறப்பு குழுக்களாக களமிறங்கியுள்ளார். முதல்வர் அலுவலகத்திலேயே பலருக்கும் வைரஸ் பாதிப்பு இருந்ததால் தற்போது எடியூரப்பா தனது வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கேரள அரசு, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்திய ட்ரிபிள் லாக்டவுன் நடைமுறையை கர்நாடக அரசும் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த நடைமுறை கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரிலும் அமலுக்கு வந்துள்ளது. முதல் படியில், கண்டைன்மெண்ட் பகுதி முழுக்க சீல் வைக்கப்படும். உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் ஒரே ஒரு சாலை மட்டுமே திறந்து வைக்கப்பட்டு, அங்கும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி கொடுப்பார்கள்.
அடுத்த நடைமுறை என்னவென்றால், கண்டைன்மெண்ட் பகுதிகள் மற்றும் பெருவாரியாக நோய் தொற்று ஏற்படக்கூடிய கிளஸ்டர் பகுதிகளில் உள்ள முதன்மை தொடர்புகள் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் வசிக்கக்கூடிய பகுதிகளிலும் முழுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்படும். இப்போது நோயாளிகள் வசிக்கக்கூடிய பகுதியில் மட்டும்தான் கட்டுப்பாடு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மூன்றாவது அம்சம் என்னவென்றால், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், பிறருக்கு அதை பரப்பி விடக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்படும். காசர்கோடு மாவட்டத்தில் இதுபோன்ற லாக்டவுன் நடைமுறை காரணமாக 90 சதவீதம் அளவுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்டர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு சமீபத்தில் கர்நாடக அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த ட்ரிபிள் லாக்டவுன் திட்டம் பற்றி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், பெங்களூரு நகர் மிக மோசமான ஹாட்ஸ்பாட் ஆக மாறிக்கொண்டே இருப்பதால் இந்த மாதிரியான ஒரு லாக்டவுனை நடைமுறையில் எடுக்க திட்டம் இருக்கிறது. அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா கிளினிகல் எக்ஸ்பர்ட் கமிட்டி தலைவர் சச்சிதானந்தா  கூறுகையில், இந்த நடைமுறை காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதுடன் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும். அத்தியாவசிய தேவைகளுக்காக யார்? யார்? வெளியே செல்கிறார்களோ அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தடுக்கப்படுவதில்லை. எனவே ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களிலும் பிரச்சினைகளை குறைத்துவிட முடியும் என்கிறார்.

தலைப்புச்செய்திகள்