Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் எப்போது வரும்?

ஜுலை 19, 2020 09:53

-நமது சிறப்பு நிருபர்-

இந்தியாவில் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? அந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக காணலாம்.

1. எதற்காக இந்தத் திட்டம்?

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளைக் கொண்டு எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் மக்கள் தாங்கள் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

2. எப்போது தொடங்கப்பட்டது?

பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பைத் தேடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக தெலங்கானா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா - குஜராத் இடையே தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 20 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

3. நாடு முழுவதும் எப்போது?

தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜூன் 1ம் தேதியில் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்தது. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் இத்திட்டம் முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை. 2021 மார்ச் மாதத்துக்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் விரைவில் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்போதைய நிலைமை போல ஒருவர் ஒரே ஒரு ரேஷன் கடையை மட்டும் சார்ந்திருக்கும் நிலை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் இருக்காது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைக்காகத் தங்கியிருக்கும் தொழிலாளர்கள்தான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

4. தாமதம் ஆவது ஏன்?

ரேஷன் அட்டைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக சில மலை சார்ந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகளை ஸ்கேன் செய்யும் மெஷின்கள் நெட்வொர்க் பிரச்சினை காரணமாகச் சரியாகச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் அட்டைத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் உள்ள 13 மாநிலங்களில் மத்திய அரசு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் இணைய இணைப்பு மந்தமாக இருப்பதாகப் புகார்கள் வந்தநிலையில் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

5. தற்போதைய நிலைமை என்ன?

இப்போது பொது விநியோகத் திட்டம் என்பது அந்தந்த மாநிலங்களின் கைகளில் இருக்கிறது. மாநிலங்களின் பொது விநியோகத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பொது விநியோகத் திட்ட மேலாண்மை என்ற பெயரில்தான் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக அனைத்து மாநில பொது விநியோக திட்டப் பயனாளிகளின் விவரங்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசு தேசிய அளவில் ஒரு தரவு மையத்தை அமைக்கும். இதன் மூலம் ஒரு நபர் வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகள் வைத்திருக்க முடியாது. அப்படி இருந்தால் அதில் ஒன்று நீக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்