Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கறுப்பர் கூட்டத்தின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

ஜுலை 21, 2020 07:10

சென்னை: கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததை தொடர்ந்து, கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப்' சேனலில், ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. அத்துடன், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து, 'யு டியூப் சேனலை முடக்க வேண்டும்; மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கருப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல், சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்தல் என, ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி, செந்தில்வாசன், 49; புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன், 38, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பின்னர், 'கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும்' என, அமெரிக்காவில் உள்ள, யு டியூப் நிறுவனத்திற்கு, மின்னஞ்சல் வாயிலாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதி உள்ளனர்.

இந்நிலையில், கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்