Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பழமை வாய்ந்த, ஆன்மீகச் சுற்றுலாத்தலம், ஆத்தங்கரை பள்ளிவாசல் ஆகும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்தும், நாள்தோறும், ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், குடும்பத்துடன் இங்கு வந்து, இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து, தங்களுடைய நேர்த்திக் கடன்களை, நிறைவேற்றிச் செல்வது வழக்கம்.
தற்பொழுது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால், கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்கள் எவரும், இங்கு வர இயலவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இதே ஊரைச்சேர்ந்த கிறிஸ்டோபர், அவருடைய மனைவி பிரகாசி, காலஞ்சென்ற அந்தோணிதாசன் மனைவி புஷ்பம் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகிய ஐவரும் இணைந்து, ஆத்தங்கரை பள்ளிவாசலில், அதுவும் குடியிருப்பு பகுதியில், பஞ்சாயத்து அனுமதி எதுவுமின்றி, ஒரு கட்டிடத்தைக் கட்டி, அதில் முறைகேடாக, போலியான மதுபானங்களை, பகிரங்கமாக விற்பனை செய்கின்றனர்.
அமோக மது விற்பனையினால், குடிகாரர்கள், நேரம், காலமின்றி கூட்டம், கூட்டமாக வந்து, மதுபானங்களை வாங்கியும், பருகியும் வருவதால், ஆத்தங்கரை பள்ளிவாசலைச் சேர்ந்த, உள்ளூர் மக்கள், மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, இரவில் அவரசத்தேவைக்குக் கூட, வெளியே வரமுடியாத, அசாதாரண சூழ்நிலை, நிலவுகிறது.
எனவே, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு, நேரில் வருகை தந்து, போலி மதுபானங்கள் விற்பனை, ஜரூராக நடைபெற்றுவரும், கடையைப் பார்வையிட்டு, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகள் எஸ்.பி.க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.