Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்தசஷ்டி குறித்து அவதூறு: கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜுலை 28, 2020 07:23

சென்னை: கந்தசஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பி கறுப்பர் கூட்டம் என்ற ‘யூடியூப்’ சேனலில் வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் கிரைம்’ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் செந்தில்வாசனிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

 இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும், ‘சைபர் கிரைம்’ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், மவுன்ட் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கந்தசஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த 2வது நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் செந்தில்வாசன் ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பி வீடியோ வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்