![](admin/uploads/.5d4115971cf107.27478490.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம்.
களத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம் தொடர்பான முழு விபரங்களை திரட்டி, ரகசிய அறிக்கையை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளது.
கருப்பர் கூட்டத்திற்கு பண ரீதியாக யார் உதவி வருகின்றனர்; இந்த அமைப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்; எந்த அரசியல் கட்சிகள், இந்த கூட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் என, அனைத்து விபரங்களையும், உளவுத் துறை திரட்டியுள்ளதாம். இதை வைத்து, தமிழக அரசியலில் பிரசாரத்தை மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
தி.மு.க.,வின் கடவுள் எதிர்ப்பு நிலை; கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, அதிகம் பேசாமல், அமைதி காத்தது என, பல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பா.ஜ., தயாராகி விட்டதாம்.'அடுத்த முறை தமிழகத்தில் பயணம் செய்யும் போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, இந்த கருப்பர் கூட்டம் தொடர்பாக பேசுவர். தமிழக கட்சி களுக்கும், இந்த கூட்டத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவர்' என்கின்றனர், டெல்லி பா.ஜ.,வினர். இந்த விவகாரத்தில் கைமாறிய பணம் தொடர்பான விவகாரத்தில், அமலாக்க துறையும் விசாரணையில் இறங்கும் என சொல்லப்படுகிறது.