Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆமதாபாத்: ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாப்பு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாப்பு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், 'ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவர்' என்ற கருத்தை வலியுறுத்தினார்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 5 கோடி ரூபாய் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்த மொராரி பாப்பு, உலகம் முழுவதும் உள்ள, தன் ஆதரவாளர்களிடம், நிதி திரட்ட துவங்கினார். இந்தியாவில் இருந்து, 11.30 கோடி ரூபாய் நிதி திரண்டது. அதை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கி கணக்கில், நேற்று ஒப்படைத்தார்.
மேலும், ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, 3.21 கோடி ரூபாயும், அமெரிக்கா, கனடா மற்றும் இதர நாடுகளில் இருந்து, 4.10 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது.'வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கான முறையான அனுமதி கிடைத்த பிறகு, அந்த தொகை, அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.