Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்டு 06, 2020 07:58

திருப்பூர்: ''ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம். இதற்கு காலம் பதில் சொல்லும்,'' என, திருப்பூரில் பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் திருப்பூரிலிருந்து அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நாடெங்குமுள்ள நீதியை விரும்பக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது மும்மொழிக் கல்விக் கொள்கையை அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. பா.ஜ.க. வெவ்வேறு அரசியல் இயக்கங்கள் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், புதிய கல்விக் கொள்கை தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கக் கூடிய வகையில் உள்ளது. ஆங்கிலேயர்களின்  அடிவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம்.

ஆனால், தமிழகத்தில் தற்போது வரை ஆங்கில மொழி என்ற ஒரு மொழிக் கொள்கையே இருந்து வருகிறது. பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களே தெரியாத வகையில் இருக்கும் சூழ்நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று உரக்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய புதிய கல்விக் கொள்கையை வரவேற்காமல் வசை பாடுபவர்கள் நிலை குறித்து காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்