Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரம்பலூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் தீரன் நகரில் நடைபெற்றது.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் வேதமாணிக்கம் தலைமை தாங்கினார். ஞானசேகரன் துரைசாமி வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 24-9-2019 அன்றைய போக்குவரத்து துறை முதன்மை செயலாளரின் எழுத்துபூர்வமான உறுதி மொழியை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 58 மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியர் நிலுவைகளை வழங்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல் பணியில் இருந்து இறந்தவர்களுக்கு குடும்ப நல நிதி தலா ரூ.3 லட்சம் வழங்கிட வேண்டும். 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக கிருஷ்ணசாமி வரவேற்றார்.
முடிவில் அமைப்பின் செயலாளர் தங்கராசு நன்றி கூறினார். இதையடுத்து கோரிக்கைகள் அடங்கிய 75 தபால் அட்டைகளை ஓய்வுபெற்றோர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தபால் பெட்டியில் போட்டு தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பினர்.