Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல்

ஆகஸ்டு 16, 2020 01:59

சென்னை: வடசென்னை வியாசர்பாடி பகுதியில் 1973 ஆம் ஆண்டில் ரூ. 2 -க்குத் தொடங்கி பின்னர் ரூ.5-க்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார் மருத்துவர் திருவேங்கடம். 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்படும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இதையடுத்து, மருத்துவரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 5 ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவை வழங்கினார் என புகழாரம் சூட்டிய அவர், அவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  1973 ஆம் ஆண்டில் 2 ரூபாயில் தொடங்கி அண்மையில் 5 ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!' என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்