Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கறம்பக்குடியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது நரிக்குறவர்களுக்காக 37 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலனி வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து அவ்வப்போது விழுந்தது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கணேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அப்போது கணேஷ் அவரது மனைவி ரேகா மற்றும் 3 குழந்தைகள் வெளியில் அமர்ந்திருந்ததால் அந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு 37 வீடுகளை சேர்ந்தவர்களும் தங்களது வீட்டின் பரிதாப நிலையை காண்பித்தனர். மேலும் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு வேறு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வீட்டை இழந்த கணேஷ் குடும்பத்திற்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை தாசில்தார் வழங்கினார்.