Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கக்கூடிய பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா ஆய்வு செய்ததில் நெகடிவ் என வந்திருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு எஸ்.பி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு அவர் தீவிரமான நிலைக்கு சென்றுவிட்டார். நோய் முற்றிவிட்டது போன்ற செய்திகள் பரவியது.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நடிகர் ரஜினி முதல் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என பலரும் எஸ்.பி.பி குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரார்த்தனை செய்தனர்.
அவருக்கு செயற்கை சுவாசம், நுரையீரல் செயலிழப்பு காரணமாக எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சமநிலையில் இருந்து வருவதாக சரண் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று குறித்த ஆய்வில் நெகடிவ் என வந்துள்ளது என்ற பதிவினை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்று நெகடிவ் ஆன நிலையிலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.