Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையிலிருந்து இடம்பெயரும் நிறுவனங்கள் திருச்சி ஐ.டி பார்க் ரூ.42 கோடியில் விரிவாக்கம்

ஆகஸ்டு 30, 2020 03:17

திருச்சி: சென்னையிலிருந்து இடம்பெயரக் கூடிய நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களால் திருச்சி நவல்பட்டு ஐ.டி பார்க் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ.42.26 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளன.

திருச்சி அருகேயுள்ள நவல் பட்டில் கடந்த 2010-ம் ஆண்டு 147.61 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளுக் கான ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் வளாகம் அமைக்கப்பட்டது. இங்கு 60 ஆயிரம் சதுர அடியில் தொழில்நுட்ப தகவல் மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சாலை வசதியின்மை, பேருந்து போக்குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்டவற்றை காரணம்காட்டி பிரபல ஐ.டி நிறுவனங்கள் இங்கு வர மறுத்தன. இதனால் ஆரம்பத்தில் பெயரளவுக்கு சில நிறுவனங்கள் மட்டுமே இயங்கின.

இதற்கிடையே, திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ் சாலையில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது. மேலும், ஐ.டி பார்க்கின் உள்பகுதியில் தேவையான அளவுக்கு உட்கட்டமைப்பு வசதி கள் ஏற்படுத்தப்பட்டதால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை இங்கு கொண்டு வரத் தொடங்கின. இதனால் இக்கட்டிடத்தில் உள்ள 60,000 சதுர அடி இடங்களும் நிரம்பின.

இந்த சூழலில் பணியாளர் ஊதியம், வாடகை மற்றும் நிர்வாகச் செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சென்னையிலிருந்து தங்களது அலுவலகங்களை திருச்சி நவல்பட்டு ஐ.டி பார்க்குக்கு மாற்ற ஆர்வம் காட்டின. புதிதாக தொடங்கவும் ஏராளமான நிறுவனங்கள் விண்ணப்பித்தன.

எனவே, ஐ.டி பார்க்கை விரிவாக்கம் செய்ய கூடுதலாக கட்டிட வசதி தேவைப்பட்டது. இதற்காக எல்காட் நிர்வாகம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.42.26 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 1.13 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 4 மாடிகளைக் கொண்டதாக அமைய உள்ள இப்புதிய கட்டிடத்தின் பணிகளை விரைவில் தொடங்கி, 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க பொதுப்பணித்துறையின் கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய கட்டிடத்தில் குறைந்த பட்சம் 10 நிறுவனங்கள் வரை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்