Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 108 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

செப்டம்பர் 08, 2020 08:25

சென்னை: கொரோனா பேரிடர் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் முறை ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளி கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கக் கோரி தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தில் 40 சதவீதத்தை பள்ளிகள் வசூலிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செப்டம்பர் 30வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் 40% கட்டணத்துக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 108 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது . பெற்றோர்களின் புகார் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தலைப்புச்செய்திகள்