![](admin/uploads/.5d80d554c078a4.86588876.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பட்டியலின பெண் ஊராட்சி தலைவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு அவரை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஊராட்சி செயலரை பணி மாறுதல் செய்ய வலியுறுததி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த சுகுனா வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் தனது ஊராட்சிக்கு வரும் தகவல்களை ஊராட்சி செயலாளர் சக்திவேல் மறைப்பதாகவும் எந்த தபால்களையும் வழங்குவது இல்லை எனவும், பட்டியலினத்தவர் என்பதால் அநாகரிமாக நடத்துவதுடன் தனது உரிமை பறிக்கப்படுகிறது எனவும் ஊராட்சி மன்ற தலைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதனை அடுத்து ஊராட்சி செயலாளர் சக்திவேல் சார்பில் அஞ்சூரை சேர்ந்த சிலர் நேற்று முன் தினம் ஊராட்சி செயலாளர் அவ்வாறு நடந்துகொள்வது இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனுவை அளித்தனர். இந்த நிலையில் தங்களது ஊராட்சி தலைவியின் உரிமையை மீட்டு தர வேண்டும் என அஞ்சூர் ஊராட்சியை சேர்ந்த 9 கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த மனுவில் கடந்த 20 ஆண்டுகளாக சக்திவேல் ஊராட்சி செயலாளராக உள்ளார். இதற்கு முன்பாக ஊராட்சி தலைவராக சக்திவேலின் அப்பா இருந்தார், அவரது மனைவி வார்டு உறுப்பினராக இருந்தார். தந்தை தலைவர் என்பதால் சக்திவேல் தலைவர் பணியையும் சேர்த்து கவனித்தார்.
இந்த நிலையில் புதிய ஊராட்சி மன்ற தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த சுகுனா தேர்வு செய்யப்பட்டதால் அவரது உரிமையை பறிக்கும் விதமாக ஊராட்சி செயலாளர் சக்திவேல் எந்த தகவல்களையும் வழங்காமல் புறக்கணிக்கிறார். ஆகவே பொதுமக்களாகிய எங்களின் மனுவை பரிசீலனை செய்து ஊராட்சி செயலாளர் சக்திவேலை பணி மாறுதல் செய்து ஊராட்சி தலைவியின் உரிமையை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.