![](admin/uploads/.60a2063ab5a7b6.06434543.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலியில்:உழவர் சந்தைகளை உடனடியாக திறக்கக் கோரி, திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, "காய்கறி மாலைகள்" அணிந்து, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்கும், உழவர் சந்தைகளை, உடனடியாக திறக்க வலியுறுத்தி, திருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் காஜா இஸ்மாயில் தலைமை வகித்தார். தங்களுடைய கழுத்தில், காய்கறிகளை மாலையாகக் கட்டி, அணிந்து கொண்டு, நூதனமுறையில், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அப்துல் ஜப்பார், செய்தித் தொடர்பாளர் ஜமால், மாணவர் அணி நயினார், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தைபேட்டை செய்யது, ஒன்றியச் செயலாளர்கள் பாளையங்கோட்டை காசிராஜன், சேரன்மகாதேவி காஜா, மேலப்பாளையம் மைதீன், பாளையங்கோட்டை ரபீக், சந்தைப் பேட்டைசேக், இணையதளப் பொறுப்பாளர் பைரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து, குரல் எழுப்பினர். கொரானா ஊரடங்கைக் காரணம் காட்டி, உழவர் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால், வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்களும், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவரின் துயர்துடைக்க, உழவர் சந்தைகளைத் திறப்பது மட்டுமே தீர்வு என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.