Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்: மு.க.ஸ்டாலின் 3-ந் தேதி கோவை வருகை

மார்ச் 19, 2019 10:24

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

ஆலோசனை கூட்டத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது. புதிய வியூகங்கள் அமைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதையடுத்து முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினருமான பொங்கலூர் நா.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது. 

மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க எவ்வாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடந்தது. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந் தேதி கோவை வருகிறார். அவர், அன்று மாலை 3 அளவில் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த பிரசார கூட்டம் நடக்கும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும். எனவே பி.ஆர்.நட ராஜனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது தான் எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், வக்கீல் கருப்பசாமி, சாய்சாதிக் மற்றும் சி.ஆர்.ராமச்சந்திரன் (தி.மு.க.) ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), ராமமூர்த்தி (மார்க் சிஸ்ட்கம்யூ), ஆர்.ஆர்.மோகன் குமார் (ம.தி.மு.க.), பஷீர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), இலக்கியன் (விடுதலை சிறுத்தைகள்) மற்றும் ராதாகிருஷ்ணன், வடிவேல், சுப்பு (கொ.ம.தே.க.) உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்